கடக ரேகையின்
மதின்மேல் நீயும்
மகர ரேகையின்
எதிரெதிர் சுழற்சியில்
விதிவழி நகர..
தகித்துக் கொண்டிருக்கும்
கதிரவக் காதலின் மத்தியில்
நம்மை இணைக்கும்
தீர்க்க ரேகையினைத் தேடிய
தீராப் பயணம் நீண்டாலும்
தூரம் மட்டும் குறையாமல் அவ்வாறே....
காலவெளிச் சாலையின்
நீட்சியின் மீட்சியில்
நம்மிரு நிழல்கள்
சந்தித்தத் தருணம்
கடக்கவே முடியாததோர்
உடைந்த பாலத்தின் இருமுனையில்
உன் மடியில் உன் மழலையும்
என்னருகில் என் இல்லாளும்...
நிலையாமைக் கொண்டு
மேநோக்கிக் கண்டேன்..
"இருவட்ச ரேகைகள்
என்றுமே இணையாது இயற்கையில்"
என்றியம்புவதுபோல்
தன்னியல்பென வெய்யில்
என்மீது பொழிந்து கொண்டிருந்தது..
பூ மத்தியில் வாழும்
ரேகைக் காதல் வாழ்க..!
No comments:
Post a Comment