6 Jan 2017

கடைமடல்

ஆணின் காதல் மட்டுமே
புனிதமெனக் கற்பிக்கப் பட்டுவிட்டது..
என்னைப் போல் நீயும்
வேசிப்பட்டம் சுமக்க மாட்டாய்..
உன்னுடனிருப்பவள்
புரிந்து கொள்ளவும்
அன்பு செய்யவும்
பழக்கிக் கொள்ளப்பட்ட
ஓர் பெண் அன்றோ!

ஆழ்நிலை உரையாடல் ஒன்றில்
நம் காதலின் மரணத்தை
உன் இல்லாளிடம் கூறிவிடு..
உன்னைப்போல் முன்பென்னை
காதல் செய்தாயென்று..
இறந்த காலவெளியின்
மறதிப் பெட்டகத்தி லடைத்து
மயான மாயையில் புதைத்து விட்டேனென்று..

நானின்று கேட்பதெல்லாம்
கழிவிரக்கத்தில்
கழிந்து கொண்டிருக்கும்
என்னை மூடி மறைக்காமல்
என்மீதுக் கட்டப்படுவதற்கான
இக்கல்லறையைத்தான்..
அதன்மீது மலரும் பூவாக
உங்கள் காதல் இருக்கட்டும்..
அதன் வாசத்திலே நான்
என்றும் ஜீவித்திருப்பேன்..!

No comments:

Post a Comment