24 Jan 2017

திமிங்கல அரசியல்

இதுநாள் வரையில்
மீனவர்கள் பிடியிலிருந்த கடலில்
அதோ! ஆங்கே
ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்
மீன்பிடிக்கத் துவங்கிவிட்டனர்...
குருவுமின்றி கருவுமின்றி
தூண்டிலிட தூண்டியவர் எவரென
செப்பிய செம்படவர்களுக்கு
உறுபசி எனும் மறுமொழி
உறுத்தி உறக்கம் கெடுத்திருக்கும்...

இளைஞர்களுக்குள் இளைஞரென
வலைஞர்களும் உருமாறி ஊடுருவ
குழப்பங்களின் புயற்காற்றில்
குறிக்கோள் கழன்று சுழல
திசைமாறாப் படகின் பயணம்
அசைந்து ஆட்டம் கண்டது!

ஆழியின் ஆழத்திற்கு ஆயத்தமானவர்கள்
மீன்பிடியின் நுண்ணரசியலை அறிந்திருக்கவில்லை..
படகோட்டி படகை கவிழ்க்க
வலைஞன் வலையை அறுக்க
இளைஞர்கள் வலைக்குள் மீன்கள்
வலைஞர்கள் வலைக்குள் இளைஞர்கள்..

சந்தர்ப்பம் நோக்கி ஒளிந்திருந்த
திமிங்கலம் வெளிவந்தது
அனைத்து விழுமியங்களையும் விழுங்கி
மீண்டும் மறைந்து கொண்டது..

பற்றி எரியும் கடல்
அலைகள்வழி தூது சொன்னது
இளைஞர்களைக்
கடற்கொள்ளையர்கள் என..!

No comments:

Post a Comment