24 Sept 2016

பட்டாம்பூச்சி

வீட்டின் மூலை ஓரத்தில்
விட்டுவிட்டு எரியும் விளக்கொளிக் கண்டு
வட்டமிட்டுத் திரிகிறது
விட்டில் இனப் பட்டாம்பூச்சி ஒன்று...
நாறிடும் பொருள்வேண்டும்
நனிவண்ணப் பூச்சிக்கு
நாரிடம் சேரமுடியா
தனிப்பூக்கூட அங்கில்லை..
இருந்தும் இப்படியொரு
ஈர்ப்பு ஏனிதற்கு
இருந்தும் இல்லாததுமாகிய
ஈர்க்கொளிக் கசிவின் மீது?
என்னவென்று நினைத்து, ஆசையில் நனைந்து
கண்கள் நாணியங்கேச் சுழல்கிறது?
இன்னல் இதுவென்று எங்கணம் விளக்குவது?
சொன்னால் கேட்கும் நிலையிலா உள்ளது?
தொட்டுத் தீஞ்சூடுக் கண்ட பிறகாவது
கெட்டுப்போன மதி மீண்டு
பட்டறிவு சுட்டறிவுக் கொண்டு
பட்டுப்போகாமல் விட்டுப் பறந்தோடிடுமா?!
எண்ணிடும் கேள்விகள் பலயெழுந்தும்
கண்டறிய முடியாமல் மனம் அழுந்தும்..
என்றும் ஒன்றும் புலப்படாப் புதிர்களை
ஏன் ஏனென்று ஆய்ந்தறிய முற்படுவது
வீண்; சில காரியங்கள் இதுபோலத்தான்..
என்னிடம் கொண்டுள்ள அவள் காதலைப்போல..!

No comments:

Post a Comment